Protected by Copyscape Website Copyright Protection

Tuesday, May 17, 2022

ஞானவாபியில் உதயமாகும் புதிய ஞானசூரியன்

 

ஞானவாபியின் கதை

கடந்த டிசம்பர் மாதம்காசி விஸ்வநாதர் கோவில் விரிவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த போது வாரணாசியில் ஒரு வாரம் தங்கி இருந்த காரணத்தினால் அதை குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் அந்த கட்டுரை இப்படி முடிந்தது.


//"இன்று இவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் உருவாகிவிட்ட பின்பும், நந்தி பரிதாபமாக ஞானவாபி மசூதியை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது என்னை மீறி கண்ணீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது. விஸ்வநாதர் ஆலய வளாகம் பிரமாண்டமாக உருவாகி விட்டது. வெகு விரைவில் மசூதி அகற்றப்பட்டு அங்கே மூலஸ்தானத்தில் முக்தி மண்டபத்தில், ஈசன் அமரவேண்டும் அதையும் நாம் நம் வாழ்நாளில் காண வேண்டும்.//


-அரவிந்த் ஸுப்ரமண்யம்


அன்று விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்கிறேன் ! இன்று ஒரு புதிய அத்தியாயம் துவங்கியிருக்கிறது;


சிவபெருமானின் ராஜதானியாக விளங்கும் விஸ்வநாதர் ஆலயம் வானளாவ எழுந்து நின்றதும், ஈசன் தனக்காக காத்திருக்கும் நந்திக்கும் மகிழ்ச்சி தரத் தீர்மானித்து விட்டார் போலும்.


நான் சிறுவனாக இருந்தபோது தான் அயோத்தியா கரசேவை குறித்த விழிப்புணர்வு நாடெங்கும் துவங்கியது ! அப்போது எங்கள் கோவை முழுவதும் பரபரப்பாக இருந்தது.


அயோத்தி கரசேவைக்கு எங்கள் வீட்டுப்பக்கத்திலிருந்தவர்கள் செங்கல் எடுத்துக்கொண்டு பயணப்பட்ட கதைகளை கேட்டேன்.


அயோத்தியை மீட்போம் என்று எங்கெல்லாம் எழுதி இருந்ததோ அங்கெல்லாம் கீழே விரைவில் காசி மதுரா என்று அதில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் ! அப்படியென்றால் என்ன என்று தேடப்போய், அப்போது தான் இந்த பிரச்சினை என்ன,  நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டு அவர்கள் இழந்த விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.


அயோத்தியின் கரசேவை முடிந்துவிட்டது விரைவில் அங்கே கோவில் வந்துவிடும் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தோம்.


அவ்வப்போது நினைத்துக் கொள்வேன் : "விரைவில் காசி மதுரா என்று பார்த்தோமே, அயோத்தியே இன்னும் வரவில்லையே எப்போது காசிக்கும் வடமதுரைக்கும் விடிவு காலம் வரப்போகிறது "என்று.


அந்த விரைவு வருவதற்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது!


ஆனால் அயோத்தி துவங்கியதும் நம்பிக்கை துளிர்த்தது!


அயோத்தி ராமனின் கும்பாபிஷேகம் நடப்பதற்கு உள்ளாகவே விஸ்வநாதனின் லீலையும் தொடங்கிவிட்டது.

இன்று மசூதியாகக் காணப்படும் இடம் தான், விஸ்வநாதன் ஆசைப்பட்டு அமர்ந்த முக்தி மண்டபம். அவருடைய உண்மையான மூலஸ்தானம்.


"நான் கைலாசத்தை கூட விட்டு விடுவேன். ஏன்? உங்களை கூட விட்டு விடுவேன்; ஆனால் என்னால் விட முடியாத ஒரு விஷயம் ஒன்று இருக்குமானால் அது காசி மாநகரம் தான்" என்று சிவபெருமான் அம்பிகையிடமும் தன்னுடைய கணங்களிடமும் சொல்லுவதாக காசிகாண்டம் கூறுகிறது.


அப்படி சிவபெருமானுக்கு மனதுக்கு இனிய அந்த காசி க்ஷேத்திரம் இழந்த தன் முழுப்பொலிவை அடையும் காலம் நெருங்குகிறது என்று மனம் துன்பத்திலும் ஆனந்தம் கொள்கிறது.

ஞானவாபி என்றால் என்ன?

ஒருமுறை ஏகாதச ருத்ரர்களில் ஒருவரான ஈசானன், மூவுலகும் சுற்றி, காசி மாநகரை அடைந்தார். அவர் விஸ்வநாதரை தரிசனம் செய்து ஜோதிர்லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய விரும்புகிறார். ஆனால் அபிஷேகம் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை. உலகெங்கும் கடும் வறட்சி உண்டாயிருந்த காலம். மிகுந்த வேதனையுடன் ஜோதிர்லிங்கத்தின் தெற்குப் பகுதியில் தனது திரிசூலத்தால் தை பூமியை குத்தினார். உடனே அங்கே நீர் ஊற்று தோன்றி ஓர் குளம் உருவானது. ஈசானரும் விஸ்வநாத லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார். அவர் உருவாக்கிய தீர்த்தமே ஞானவாபி.


கொடுங்கோலன் ஔரங்கசீப், 1664 ஆம் ஆண்டு வாரணாசி நகரின் மீது படையெடுத்தான். ஹிந்துக்களின் தலைமைக் கேந்திரம், ஞானத்துக்கான கேந்திரம் என்ற காரணத்துக்காகவே விஸ்வநாதர் ஆலயம் ஒளரங்கசீப்பினால் சூறையாடப்பட்டது. இதனால் பூஜகர்களால் மூல விஸ்வேஸ்வர லிங்கம் ஞானவாபிக்குள் மறைத்து வைக்கப்பட்டது. 

பரமேஸ்வரனின் மூலஸ்தானம் இருந்த முக்தி மண்டபம் கர்ப்பக்ரஹம் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே ஔரங்கசீபினால் மசூதி உருவாக்கப்பட்டது. பிந்து மாதவர் ஆலயம் இருந்த இடத்திலும் மசூதி உருவானது.


பல்லாண்டுகளுக்குப் பின் ஆலயம் அகல்யாபாய் மஹாராணியால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. விச்வநாதர் தன் சொந்த இடத்தை இழந்து, அவிமுக்தீஸ்வரருடைய ஆலயத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டார் (இன்று நாம் காணும் ஆலயம்). பிந்துமாதவரும் இன்றும் ஓர் வீட்டின் மாடியில் இருப்பதைக் காணலாம்.


இதுதான் வரலாறு !

ஒரு படையெடுப்பு நடக்கும்போது, அதிலும் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் படையெடுப்பு நடக்கும் போது இது போன்ற விஷயங்கள் நடக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்று அங்கீகரித்தால் கூட பரவாயில்லை. ஆனால் நடுநிலை பேசுகிறேன் என்று சிலர் இப்போது இதை பிரச்சனையாக வேண்டுமா என்று கேள்வி கேட்பதும், அதைவிட ஒருபடி மேலே போய் அவுரங்கசீப் மதநல்லிணக்கத்தை பேணினார் அதற்காகத்தான் ஆலயத்தின் அருகிலேயே மசூதி அமைத்துக் கொடுத்து இரண்டு மதத்தவரும் ஒற்றுமையாக இருக்க வழிவகை செய்தார் என்பதெல்லாம் நகைச்சுவையின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். 


மசூதிக்கு உள்ளே ஆலய அமைப்பு அப்படியே இருப்பதையும், அங்கே நம் தெய்வ திருவுருவங்களும் அலங்கார வளைவுகளும் இருப்பதும் இன்றளவும் நாம் பார்க்கமுடியும்.  இன்று நாம் காணும் விஸ்வநாதர் ஆலயத்தில் இருக்கும் நந்தி ஞானவாபி மசூதியை பார்த்துக் கொண்டிருப்பது கண்கூடு.


உலகத்திலேயே எங்கேயாவது மசூதிக்கு ஞானவாபி என்ற பெயர் வைத்து பார்த்ததுண்டா ?


கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்ற வார்த்தைக்கு ஏற்ப கண்ணுக்கு நேராக பார்த்தாலே தெரிகிறது - ஆலயம் சூறையாடப்பட்டு அங்கேயேதான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று. ஆனால் அதை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இத்தனை வருடங்கள் இழுத்தடித்ததே நம் தேசத்தின் சாபக்கேடு.


ஞான்வாபி மசூதி வளாகம் விஸ்வநாதர் ஆலயமே ! அது மஸ்ஜித் அல்ல என்பதை நிலை நிறுத்திட பண்டிட் கேதார்நாத் வியாஸ் போன்ற பலரும் பாடுபட்டனர். 

இந்தியா சுதந்திரம் அடைந்த 15 ஆகஸ்ட் 1947 அன்று எந்த ஒரு முஸ்லீமும் ஞானவாபி வளாகத்திற் குள் சென்று தொழுகை நடத்திடாமல் அவ்விடத்தை பாதுகாத்தார். 


ஏற்கனவே பலரும் இது இந்து கோவில் தான் என்று வழக்கு தொடுத்து நடத்திக் கொண்டிருந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஞானவாபி மசூதிக்குள் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு என்று ஏதேதோ காரணம் காட்டி அது எதையுமே அப்போதிருந்த அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. 1991ம் ஆண்டின் சட்டத்தை காரணம் காட்டி அது நம் கோவில் தான் என்பதையே காது கொடுத்துக் கேட்க மறுத்து விட்டார்கள்.


இதில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது ! இது மசூதி கட்டிடம் தான் ! இது கோயிலே இல்லை ! என்று அனத்தி கொண்டிருப்பவர்கள் ஒரு விஷயத்தை சௌகரியமாக மறந்து விடுகிறார்கள்.


ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் தான், விச்வநாதரின் ஆலயத்தை சேர்ந்த, காசி காண்டத்தில் சொல்லப்படும் பழமையான ச்ருங்கார கவுரி விக்ரஹம் உள்ளது.


இந்த சந்நிதியில் வழிபட ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் இந்து பெண்கள் 5 பேர் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


‛‛ஞானவாபி மசூதி வளாகத்தின் மேற்கு சுவர் அருகே இந்த சந்நிதி அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும். இதுதவிர கோவில் வளாகத்தில் உள்ள பிற விக்கிரஹங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது. 


இந்த மனுவை ஏற்றுக்கொண்ட வாரணாசி நீதிமன்றம்,  ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வை வீடியோ பதிவு செய்து மே 10க்குள் சமர்பிக்க உத்தரவிட்டது.


இதேபோன்ற உத்தரவு இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டு இருந்தபோதும் அப்போது இருந்த அரசாங்கங்கள் அதை நடைமுறைப்படுத்த தயங்கியது. ஆனால் நிச்சயமாக இந்த அரசாங்கத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும் ! தைரியமாக இந்த விஷயத்தை முன்னெடுத்து மேற்கொண்டு ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில் தான் ஆய்வுக்குழு, ஞானவாபி மசூதி வளாகத்தில் கிணறு போன்ற அமைப்பின் உள்ளே சிவலிங்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். வஸுகானா என்ற, அவர்கள்கை கால்களை சுத்தப்படுத்தும் குளத்தின் உள்ளே சிவலிங்கம் இருந்தது என்று மனம் பதைக்கும் செய்தி வருகிறது. இன்னும் இரண்டு லிங்கங்கள் கிடைத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒரே ஒரு வீடியோ கிளிப் தான் இப்போது வெளியே வந்துள்ளது.


இதுதான் விஸ்வநாத மூல லிங்கம் என்றும், சிவாலயத்தில் இருக்கும்  ரிஷிகளால் பூஜை செய்யப்பட்ட லிங்கங்களில் ஒன்றாக இது இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.


விஸ்வநாத மூல லிங்கம் சுயம்பு லிங்கம். அது இனி முழுமையாக லிங்கத்தை தரிசனம் செய்தும், ஆராய்ச்சிகளுக்கும் பின்னரே தெரிய வரும்.


இப்போது ஞானவாபி மசூதி என்பது தான் நம் மூலக்கோயில் இருந்த இடம் என்பது  கண்ணுக்கு நேராக தெரிந்த போதும், சட்ட ரீதியான ஆதாரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அது ஒரு இந்துக் கோயில் தான் என்பதற்கான தெளிவான ஆதாரமாக இது விளங்குகிறது.


இதில் வரவேற்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் பல இஸ்லாமியர்கள், " ஆமாம்! எங்களுடைய மூதாதையர்கள் இந்த இடத்தை ஆக்கிரமித்து ஆலயத்தை இடித்துவிட்டு மசூதி கட்டியிருக்கிறார்கள். இந்த இடத்தில் ஆலயம் வருவது தான் சரி" என்கிற ரீதியில் வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார்கள்..

நம்முடைய சனாதன தர்மத்தை சேர்ந்த ஒரு ஆலயத்துக்கும் ஒரு மற்ற மதத்தைச் சேர்ந்த ஆபிரகாமிய மதத்தை சேர்ந்த வழிபாட்டு தலத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

மற்ற மதங்களில் எல்லாம் வழிபாடு செய்வதற்கான ஒரு இடம் மட்டுமே! ஆனால் நம்முடைய ஆலயம் இறைவன் வசிக்கக்கூடிய இல்லம். இது இறைவன் நடந்த இடம்; இறைவன் குடியிருக்க கூடிய மாளிகை; இறைவனை ஜீவனுள்ள ஒரு சைதன்யமாக நாம் உணர்கிறோம் ! 

மற்றவர்களுக்கு அவர்கள் வழிபாட்டை செய்வதற்காக கூடும் ஒரு தலம் மட்டுமே ! அது எங்கே இருந்தாலும் ஒன்று தான். 

நமக்கோ மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற ஒவ்வொன்றுக்கும் விசேஷம் உண்டு.

ஈசன் விரும்பி அமர்ந்த முக்தி மண்டபம் இருந்த இடம் அது. 

அஷ்டதிக் பாலகர்களின் ஒருவரான ஈசானரால் உருவாக்கப்பட்ட கிணறு ஞானவாபி.  

மூர்த்தியோ 12 ஜோதிர்லிங்கங்கள் இலும் முதன்மையான விஸ்வநாத லிங்கம்.

அதனால் அந்த இடத்தின் மகத்துவம் எழுத்து எழுத்தில் அடங்காது. 

ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ராமபிரான் பட்டாபிஷேகம்  காணுகிறார்.

அதேபோல் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு நந்தியம்பெருமானின் காத்திருப்புக்கு ஒரு பதில் கிடைக்க துவங்கியிருக்கிறது என்று தோன்றுகிறது!

அடமானத்தில் இருக்கும் பரம்பரைச் சொத்தை பல தலைமுறைகள் தாண்டி ஒருவனால் மீட்க முடியுமானால் அவன் என்ன ஆனந்தத்தை அடைவானோ அந்த ஆனந்தத்தை நாம் பாரதீயர்கள் அனைவரும் அடைய கூடிய காலம் நெருங்கி வருகிறது !

இவையெல்லாம் நாம் வாழும் காலத்திலேயே பார்க்கக்கூடிய பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்று உள்ளுணர்வு சொல்கிறது!

வெகுவிரைவில் ஈசனை அவனுடைய முக்தி மண்டபத்தில் இருத்தி அங்கேயே தரிசிப்போம்

நம பார்வதி பதயே : ஹரஹர மகாதேவா

V. அரவிந்த் ஸுப்ரமண்யம்!

Saturday, June 27, 2020

ஜகந்நாதருக்கு வரும் ஜுரம்

ஜகந்நாதருக்கு வரும் ஜுரம்


இறைவனை ஏதோ கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரஹம் என்று எண்ணாமல் நம்முள் ஒருவராக எண்ணுவதே நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு. அவரை ஜீவனுள்ள, சைதன்யமுள்ள ஒரு நபராகக் கண்டு மகிழுகிறோம்.

சொந்த கிராமத்திலிருக்கும் குலதெய்வங்களிலிருந்து நகரங்களில் மஹாக்ஷேத்திரங்களில் கோலோச்சும் தெய்வங்கள் வரை இதுதான்  நம் வழக்கம்.

சிதம்பரத்தில் இருக்கக்கூடிய தீட்சிதர்கள் நடராஜரை தங்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள் மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். அதேபோல புரி நகர மக்கள் ஜகந்நாதரையும், பலதேவரையும், சுபத்ரையையும் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகவே  எண்ணுகிறார்கள்.


(புரியில் எனக்கு சில உபாஸக நண்பர்கள் உண்டு. அவர்கள் தங்கள் முக்கிய தாந்த்ரீக வழிபாட்டு கேந்திரமாக புரியை உயர்த்திச் சொல்வதுண்டு. ஆனால் அதனால் மட்டும் அது வெறும் சடங்காக மட்டும் விளங்கி, பக்தி பாவத்தை கிஞ்சித்தும் குறைக்கவில்லை என்பதே அதன் தனித்துவ அழகு - அரவிந்த் ஸுப்ரமண்யம்)

நாம் கோகுலாஷ்டமிக்கு மட்டுமே குழந்தையாக க்ருஷ்ணனை பூஜித்து பட்சணங்கள் செய்வோம். ஜகன்னாதபுரியிலோ என்றுமே தங்கள் குழந்தையாகவே அவரைக் கருதுவதால் தான், வேளா வேளைக்கு வித விதமான பலப்பல உணவுகள் அவருக்குப் படைக்கப்பட்டு மஹாப்ரஸாதமாக அளிக்கப்படுகிறது.

இன்று நாம் சளி காய்ச்சல் வந்தால் 14 நாட்கள் தனிமை வாசம், சித்த மருத்துவர்கள் கொடுக்கக்கூடிய மருந்துகள், கஷாயங்கள், தன்னந்தனியாக யாரையும் சந்திக்காமல் இருக்க கூடிய நிலை என்றெல்லாம் க்வாரண்டைன் செய்யும் கொரோனா காலத்தில் வாழ்கிறோம். 

ஆனால் புரி நகரில் வருடா வருடம் கிருஷ்ண பரமாத்மாவான ஜெகநாதனும், அவன் சகோதரனும் சகோதரியும் நோய்வாய் படுகிறார்களாம். நோய்வாய்ப்பட்டவர்கள் இதேபோல் 15 நாட்கள் தனிமைப்படுத்தி குவாரண்டைன் வைக்கும் வைபவமும் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. ஆண்டுதோறும் ஆஷாட மாதம் என்று சொல்லக்கூடிய அவர்களுடைய ஆடி மாதத்தில் உலகப் புகழ்பெற்ற ஜெகன்னாதருடைய ரதோற்சவம் நடைபெறும். (சமீபத்திய ரதோற்சவம்) நமக்கு நினைவிருக்கும். 

அந்தக் காலத்துக்கு முந்தைய 14 நாட்கள் ஜெகநாதன் யாரையும் சந்திப்பதில்லை. இதற்கு காரணம் என்ன தெரியுமா ?

ஆஷாட மாதம் துவங்குவதற்கு முன்பு வரக்கூடிய பௌர்ணமியில் புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு அந்த கருவறையில் இருக்கக்கூடிய தெய்வங்களான ஜெகன்நாதனுக்கும் அவருடைய சகோதர சகோதரிகளுக்கும், “தேவ ஸ்நான் பூர்ணிமா” என்று 108 வாளி மூலிகைத் தண்ணீரால் அபிஷேகம் செய்வார்களாம்.

வெயில் காலத்தில் குளிக்காமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிடித்து பச்சைத் தண்ணீரால் அபிஷேகம் செய்வார்கள். ஒரேடியாக செய்தால் என்ன ஆகும் ? குழந்தைகள் மூவருக்கும் ஜுரம் வந்து விடுகிறதாம். அதனால் மூவரும் யாரையும் சந்திக்காமல் 15 நாட்கள் தனியே இருப்பார்கள். அனவாஸர க்ருஹம் எனும் தனி இடத்துக்கு அவர்களைக் கொண்டு சென்று விடுவார்கள்.

கோவில் அர்ச்சகர்களே ஆயுர்வேத மருத்துவர்கள் ஆகி ஜெகநாதன் கூடவே இருப்பார்கள். அப்போது அவர்களதுஅந்த காய்ச்சல் குணமாக பத்து மூலிகைகளைக் கொண்டு அழைத்து உருவாக்கிய ’தசமூலம்’ எனும் ஆயுர்வேத மருந்தையும், ’பூலூரி’ என்று சொல்லக்கூடிய வாசனை மூலிகையால் செய்யப்பட்ட எண்ணையும் தருவார்கள். 

வழக்கமான ’சப்பன் போக்’ எனப்படும் பல்சுவை உணவு இல்லாமல் பத்தியச் சாப்பாடு தான் நைவேத்யம். 15 நாட்கள் இந்த நேரத்தில் ஜெகநாதன் யாருக்கும் தரிசனம் கொடுப்பதில்லை, இந்த மருந்துகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு உடல் தேறியபின், ஜகந்நாதர் முதலில் கொஞ்சம் போல கிச்சடி சாப்பிடுவார். பின் வழக்கமான பற்பல உணவுகள் ஆரம்பிக்கும்.

பின்னர் நோயெல்லாம் குணமான பிறகு சுபத்ரையுடனும், பலபத்ரனுடனும் ஜெகநாதர் சந்தோஷமாக தேரிலேறி தேரோட்டத்தை துவங்குவதாக ஐதீகம்.

ஜகத்குருவான சங்கராச்சாரியார் முன்னே வந்து அவனை தரிசனம் செய்வார். புரி நகரின் ராஜா வெள்ளிப் பூண் போட்ட விளக்குமாறு கொண்டு ரதத்தை சுத்தம் செய்வார். பாமரன் பண்டிதன் வித்யாசம் இல்லாமல் அவர்கள் இறைவனின் ரதோத்ஸவத்தை தங்கள் வீட்டு குழந்தைகளின் வரவாகவே உணர்வதே அதன் அழகு.

அதனால் தான் இந்த ஆண்டு தேரோட்டத்தை தடை செய்த போது, அரும்பாடு பட்டு அதனை நிறுத்த சம்மதிக்காமல் பக்திப் பெருக்குடன் நடத்தி விட்டார்கள். 

இது தான் இறைவனுடனான பந்தம் !

குழந்தைகள் நோயெல்லாம் குணமாகி ஆனந்தமாக பவனி வருவதைக் காண லக்ஷோபலக்ஷம் மக்கள், ஏதோ தங்கள் குழந்தைகளே வருவதாக உணர்ந்து வடம் பிடித்து ரதம் இழுப்பார்கள். 

மூத்தவனான பலதேவன் முன்னே செல்ல, குட்டித்தங்கையான சுபத்ரையை பாதுகாப்பாக நடுவே விட்டு, ஜெகந்நாத க்ருஷ்ணன் ஒய்யாரமாக பின்னே வருவான்.

உலகுக்கெல்லாம் நாயகன் - ஜகத்தின் நாதன் தான். அதனால் என்ன ? எங்களுக்கு அவன் குழந்தை தானே ?  ஜுரமெல்லாம் குணமாகி, ரதத்தில் ஏறும் முன்பு அந்த குட்டி வாசல் வழியே முட்டைக் கண்களை முழித்துக் கொண்டு அவன் எட்டிப்பார்த்து வெளியே வரும் அழகு ஒன்று போதுமே, இந்த ஜன்மம் கடைத்தேற ! 

இறைவனை நம்முடன் வாழ்பவனாகவே பார்ப்பது நம் தர்மம். தெய்வீகம் என்பது எங்கோ இருப்பதல்ல ! தெய்வங்களுடனே நாளைத் துவங்கி தெய்வத்துடனே வாழ்வதே நம் ஹிந்து மதம். 

பாரத பூமியின் ஓவ்வொரு அணுவிலும் இந்த தெய்வீகத் தன்மை என்றும் எப்போதும் கலந்தே இருக்கும்

ஜகன்னாத: ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே ! 
ஜெய் ஜகந்நாத் ! ஜெய் விமலா! 
Aravind Subramanyam

Monday, May 11, 2020

பக்தியின் பெருமையை உணர்த்திய பகவான்


பகவான் கல்நெஞ்சனா?
https://shanmatha.blogspot.com/2020/05/meenam-ayyappan.html?m=1
நண்பர் Meenam Ayyappan இந்தப் படத்தை அனுப்பி இதற்கான வரலாறு என்ன என்று கேட்டிருந்தார்.
அதன் வாயிலாக இன்றைக்கு ஒரு உத்தம பக்தனை ஸ்மரிக்கும் பாக்யம் கிட்டொயது. அவரும் இதை தனியாக எழுதிவிடுங்கள். எல்லோருக்கும் பயன்படும் என்றார்.

மிகச்சிறிய வயதில் என் அத்தைப் பாட்டி சொல்ல கேட்ட கதை.

ஆறு ஏழு வயதில் கேட்டதால் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துவிட்டது.

எனக்கும் தெளிவாக எந்த நூலில் இருக்கிறது என்று ஞாபகம் இல்லை. ஆனால் இந்த படத்தை பார்த்ததும் எனக்கு கதை முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது.

அப்படியே எழுதி விட்டேன்
அரவிந்த் ஸுப்ரமண்யம்
************************
மகாபாரத காலத்தில்
மயூரத்வஜன் என்ற மன்னன்
ரத்தினபுரி என்ற பகுதியை ஆண்டு வந்தான். அவன் பரம வைஷ்ணவன்.
தர்மத்தை தொடர்ந்து செய்வதற்கே புத்தரன் தேவை என்பதை உணர்த்தும் முகமாக இவனது மகன் தாம்ரத்வஜனும் தந்தையைப் போலவே வீரமும் பக்தியும் கொண்டவன்.

அந்த சமயத்தில் யுதிஷ்டிரர், அஸ்வமேத யாகம் செய்தார். உலகிலுள்ள எல்லா நாடுகளையும் தன் வசம் கொண்டு வருவதே இந்த யாகத்தின் நோக்கம்.
இதற்காக ஒரு குதிரையை நாடுதோறும் அனுப்புவர். அந்த நாட்டு மன்னன், இவர்களின் தலைமையை ஏற்க விரும்பாவிட்டடால் யார் குதிரைக்கு பாதுகாவலாக செல்கிறாரோ அவரை எதிர்த்து போரிட்டு குதிரையை கைப்பற்ற வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட தர்மனின் குதிரையை தாம்ரத்வஜன் கைபற்றினான்.
குதிரைக்கு பாதுகாவலாக வந்த அர்ஜுனன் மயூரத்வஜனை எதிர்த்து போரிடப் போவதாக புறப்பட்டான். அப்போது அவனை தடுத்து நிறுத்திய பகவான் கிருஷ்ணர், மயூரத்வஜனது பெருமையும், அவனது பக்தியின் ஏற்றத்தையும்,
அவனது தர்ம செயல்களையும் போற்றிப் புகழ்ந்தார். அப்பேர்ப்பட்ட பரம பக்தனான, பரம தர்மவானான மன்னனை எதிர்த்து போரிட்டால், அந்த பக்தியும் தர்மமும் அவனைக் காக்கும். ஒரு சமயம் உனக்கு தோல்வி கூட நேரலாம் என்று எச்சரிக்கை செய்தார்.

கிருஷ்ணன் அப்படி அந்த மன்னனை தொடர்ந்து புகழ்வது அர்ஜுனனுக்கு பொறாமையையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது
என் அண்ணனை விட ஒரு சிறந்த தர்மவான் உண்டா?
என்னை விட ஒரு சிறந்த வீரன் உண்டா அப்படியானால் அதை நான் பார்த்து விட வேண்டுமே என்று கிருஷ்ணனிடம் கிண்டலாகக் கூறினான்.

அர்ஜுனனின் ஆணவத்தை போக்க வேண்டும் என்று தீர்மானித்த பகவான் க்ருஷ்ணர்,
தான் ஒரு பிராமணன் போலவும், அர்ஜுனன் தன் சிஷ்யன் போலவும் மாறுவேடம் பூண்டு
மயூரத்வஜன் அரண்மனையை அடைந்தார்கள்.

அரண்மனைக்கு வந்த அதிதிகளை க்ருஷ்ண பக்தர்கள் என்றுணர்ந்து ஆனந்தமாக வரவேற்று, அவர்களை அவர்கள் காலில் விழுந்து வணங்கி
உபசரித்தான் மயூரத்வஜன்.
பின்னர் அவர்களை உணவு உண்ண வேண்டி நின்றான்.

கிருஷ்ணனோ உணவு உண்ண மறுத்தார். ஏன் என்று மன்னன் காரணம் கேட்டபோது, அந்தண வேடத்திலிருந்த கிருஷ்ணர் அவனிடம் “மன்னா! நான் இந்த சீடனுடனும் என் மகனுடனும் காட்டு வழியே வரும்போது என் மகன் ஒரு சிங்கத்திடம் அகப்பட்டு விட்டான். அதனிடம் ''என்னை எடுத்துக்கொள். என் மகனை விட்டுவிடு'' என்று வேண்டியும் மறுத்துவிட்டது.

''என்ன செய்தால் என் மகனை விடுவாய்?'' என்று கேட்டதற்கு 'எந்த மனிதனாவது, தன் முழு சம்மதத்துடன் தன் மனைவி ஒருபுறமும் மகன் ஒருபுறமும் நிற்க, தன்னை இரண்டாக அறுத்து அதில் வலப்பாகத்தை எனக்கு கொடுத்தால் உன் மகனை விட்டு விடுகிறேன் என்றது” என்றார்.
இப்படி ஒரு விபரீதமான
விஷயத்துக்கு யார் சம்மதிப்பார்கள்? அதிலும் அவர்கள் சம்மதித்தாலும் அவர்கள் மனைவியும் மகனும் எப்படி சம்மதிப்பார்கள்? எங்கள் பிள்ளையை நாங்கள் இறக்க வேண்டியதுதான்" என்று க்ருஷ்ணர் கூறினார்.

இதைக் கேட்ட மன்னனும் "அந்தணரே! வருத்தப்பட வேண்டாம்.
உங்கள் மனக்குறை நீங்கும்படி நானே என் உடலை தருகிறேன்.
பரோபகாரார்த்தம் இதம் சரீரம் என்று கூறுவார்கள். என்னுடைய உடலால் கிருஷ்ண பக்தரான உங்களுக்கு நன்மை ஏற்படுமானால் அதைவிட எனக்கு ஆனந்தம் வேறு எதுவும் இல்லை. இதுவே நான் பகவானுக்கு செய்யும் கைங்கர்யமாக எண்ணுகிறேன்.
என் மனைவியும் மகனும் இதற்கு சம்மதிப்பார்கள்" என்று அவர்கள் முன்னிலையிலேயே கூறினார்.

மயூரத்வஜன் உடலைத் தர சம்மதித்ததைக் கண்ட அவன் மனைவி, “அந்தணரே! மனைவி கணவனின் அர்த்தாங்கினி- அவன்  உடலில்  பாதி எனவே எனது உடலை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
கிருஷ்ண அந்தணரோ “மனைவி கணவனின் இடப்பாகத்திற்கு உரியவள். சிங்கம் கேட்பது மன்னனின் வலது பாகத்தை! எனவே இது முடியாது” என்றார்.

அப்போது தாம்ரத்வஜன் “ஆத்மாவை புத்ர நாமாஸி என்று வேதம் சொல்கிறது. மகன் தந்தைக்கு சமமானவன். என் உடலை எடுத்துக் கொள்ளுங்கள்” என வேண்டினான்.
அந்தண க்ருஷ்ணனோ முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அதற்கும் மறுத்து விட்டார்.

அர்ஜுனன் நடப்பதையெல்லாம் கடும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

இறுதியாக, தன் மனைவியையிம் மகனையும் சமாதானப்படுத்திய மயூரத்வஜன், பகவான் க்ருஷ்ணரின் திருநாமத்தை சொல்லியபடி கைகூப்பி த்யானித்து அமர்ந்தான். மன்னனின் உடலை அவன் மனைவியும் மகனுமே மேலிருந்து கீழாக அறுத்தனர். தலை பாதி அறுபட்டதும் மன்னனின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.
கண்ணனின் மனது கல் மனது என்று எல்லோரும் சொல்வது தெரிந்தது தானே? பக்தர்களை கடைசி நிமிடம் வரை சோதித்துப் பார்ப்பது அவன் வழக்கம்.

எனவே மன்னனின் இடது கண்ணில் வரும் கண்ணீரை சுட்டிக் காட்டி,
“உனக்கு முழுமையாக இஷ்டம் இல்லை போலிருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டு இப்போது வருந்துகிறாய்.அப்படி இஷ்டமில்லாமல் வருத்தத்துடன் தரும் பொருள் வேண்டாம். நாங்கள் கிளம்புகிறோம்” என்றார்.

அப்போது மன்னன்,
“ஸ்வாமி! இஷ்டமில்லாததால் கண்ணில்  கண்ணீர் வரவில்லை. வலியும் காரணமில்லை. எனது வலது புறம் உங்களுக்கு பயன் படுகிறது ஆனால் இடதுபுறத்தால் உங்களுக்கு பயன் இல்லாமல் போய்விட்டதே! உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று இந்த உடலின் இடப்பாகம் மட்டுமே வருந்துகிறது. அது வெறும் நெருப்புக்குத்தான் போகும். வலதுபுறம் செய்த புண்ணியத்தை இடதுபுறம் செய்யவில்லை. ” என்றான்.

இதைக் கேட்ட பின்பு அர்ஜுனனின் உள்ளம் உருகிவிட்டது. இப்பேர்பட்ட மன்னனை நாம் எதிரியாக நினைத்தோமே என்று எண்ணி பதறினான் அர்ஜுனன்.
" போதும் கிருஷ்ணா இந்த விளையாட்டு. இனிமேலும் இந்த உத்தம பக்தனையும் அவன் குடும்பத்தையும் சோதிக்காதே" என்று மன்றாடி கேட்டுக் கொண்டான்.

அவன் கூறியதைக் கேட்ட பகவான் மகிழ்ந்தார். தர்ம ரூபமான மயூரத்வஜன் முன்னே, சங்கு சக்கரம் தாங்கி தன் ஸ்வயம்ப்ரகாச ரூபத்தில் காட்சி தந்தார். அவனது உடலைத் தொட்டார். அறுபட்ட உடல் சேர்ந்தது.

மன்னனும் அவன் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க கிருஷ்ணனை வணங்கி நின்றார்கள். பகவானும்,
"மயூரத்வஜா!
உன் பக்தியின் சிறப்பையும், உன் குடும்பத்தின் தர்மத்தையும் இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டத்தான் இவ்வளவு கடினமான ஒரு நாடகத்தை நான் நடத்தினேன். பார்ப்பவர்கள் என்னை கடின மனது உடையவன் என்று கருதினாலும், என்னை தூஷித்தாலும் பரவாயில்லை. முடிவில் உன் தர்மத்தின் சிறப்பை உலகத்திற்கு எடுத்துக் காட்டி உன்னை வைரமாக ஜ்வலிக்க செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். என்றென்றும் உங்கள் அனைவர் மனதிலும் என் உருவம் நிலைத்திருக்கும்.
என்மேல் பக்தி பூண்டு வாழ்வாங்கு வாழ்ந்து முடிவில் நீங்கள் மூவரும் மோட்சத்தை அடைவீர்கள்"
என்று அருளினார்.

பக்திக்கு பகவானும் வசப்பட்டவன் அல்லவா?
இதுபோன்ற தர்ம சிந்தனையும் பக்தியும் நமக்கும் வர இறைவனை பிராத்திப்போம்.
பக்தபரிபால பாதரேணு
Aravind Subramanyam

Tuesday, April 28, 2020

கேரளத்தின் 108 சிவாலயங்கள்

கேரளத்தின் 108 சிவாலயங்கள்
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

பரசுராமர், பரமேஸ்வரனின்
சிஷ்யன் ஆகவும் பக்தனாகவும் விளங்கினார். ஈசனின் அனுகிரகத்தால் பரசு என்று சொல்லக்கூடிய கோடாலியைப் பெற்று, அதன்மூலம் பார்க்கவ ராமனாக இருந்தவர் பரசுராமன் ஆக மாறினார்.

21 தலைமுறை க்ஷத்ரியர்களை வதம் செய்த தோஷத்திலிருந்து விடுபட வேண்டி, பரமசிவனை பூஜித்து தான் வென்றெடுத்த மொத்த பூமியையும் காச்யபருக்கு தானமாக கொடுத்தார்.

பின்னர் தனக்கென கேரள ராஜ்யத்தை உருவாக்கிய பிறகு அங்கே பிரதான ஆராதனா தேவதையாக பரமேஸ்வரனை
ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து 108 சிவாலயங்களை உருவாக்க எண்ணினார்.

ஏற்கனவே துர்க்காலயங்களையும், சாஸ்தா ஆலயங்களையும் உருவாக்கிய பரசுராமர்,
கேரள ஆராதனா முறைகளில் பரம புருஷனாக பரமேஸ்வரனை விதித்து அவரது 108 ஆலயங்களையும் பிரதிஷ்டை செய்தார்.

108 துர்கா ஆலயங்களை போலவே 108 சிவ ஆலயங்களுக்கும் வரிசைப்படுத்தும் ஒரு துதி உண்டு.
துர்காலய துதி போல இதை அனுதினமும் பாடாவிட்டாலும்,
பல சிவபக்தர்கள் இதை தொடர்ந்து பாராயணம் செய்துதான் வருகிறார்கள்.

நாம் ஏற்கனவே கண்ட துர்காலய ஸ்துதி போலவே, இந்த சிவாலய ஸ்துதியும், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவாலயங்களை வரிசைப் படுத்துகிறது.

(வைக்கம், ஏற்றுமானூர், தளிப்பறம்பா போன்ற பிரபலமான சிவ க்ஷேத்திரங்கள் இதில் வரிசைப்படுத்த படுவதுடன்,
கொடுங்கல்லூர்,
திருமாந்நாம்குந்நு
போன்ற பகவதியின் பெயரால் இன்று பிரபலமாக அறியப்படும் தலங்களும் கூட
ஆதியில் சிவாலயங்களே என்பதை இந்த வரிசை உறுதிப்படுத்துகிறது. -V. அரவிந்த் ஸுப்ரமண்யம்)

வடக்கே கோகர்ணத்தையும்
தெற்கே சுசீந்திரத்தையும் இந்த வரிசையில் இணைத்து இருப்பதை நாம் பார்க்க முடியும்.

இந்தப் பாடலுக்கும் பலச்ருதி இருக்கிறது.

இப்பறஞ்சவ நூற்றியெட்டும் பக்தியொத்து படிக்குவோர்
தேஹம் நசிக்கிலெத்தீடும் மஹாதேவன்டெ சன்னிதெள

துர்க்கையின் பாடலில் ஆயுள் ஆரோக்கியம் புத்திர சந்தானம் போன்றவை எல்லாம் வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், இங்கே ஞான மூர்த்தியான ஈஸ்வரனின் பாடல் என்பதால், தெளிவாக
இதை பக்தியோடு படிப்பவர்கள்
தங்கள் ஆயுள் முடிந்ததும் நேரடியாக சிவனின் சந்நிதானத்தை அடைவார்கள் என்று கூறி
விட்டார்கள்.

பிரதோஷத்தில் ஜபிச்சாகிலசேஷதுரிதம் கெடும்
யத்ர யத்ர சிவக்ஷேத்ரம் தத்ர தத்ர நமாம்யஹம்

பிரதோஷ காலத்தில் இதைப் படிப்பதால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்குகிறது. இந்த 108 மட்டுமல்லாமல், வேறு எங்கெல்லாம் சிவ க்ஷேத்திரங்கள் இருக்கிறதோ அவை எல்லாவற்றுக்கும் வணக்கம் என்று கூறி இந்த துதி முடிகிறது.

நூற்றியெட்டு சிவாலயங்கள்

ஸ்ரீமத்தக்ஷிணகைலாசம் ஸ்ரீபேருரு ரவீஸ்வரம்
சுசீந்திரம் சொவ்வரம் மாத்தூர் த்ரிப்ரங்கோட்டதா முண்டையூர்

ஸ்ரீமந்தாம்குன்னு சொவ்வல்லூர் பாணாஞ்சேரி கொரட்டியும்
பொராண்டக்காட்டு செங்கன்னூர் கொல்லூரும் திருமங்கலம்

திருகாரியூர் குன்னப்ரம் ஸ்ரீவெள்ளூர்அஷ்டமங்கலம்
ஐராணிக்குளவும் கைநூர் கோகர்ணம் எறணாகுளம்

பாரிவாலூரடாட்டூம் நல்பரப்பில் சாத்தமங்கலம்
பாராபரம்பு திருக்கூரு பனையூரு வயட்டில

வைக்கம் ராமேஸ்வரம் மற்றும் எட்டுமானூர் எடக்கோளம்
ச்செம்மந்தட்டாலுவா பின்னே திருமிட்டக்கோட்டு சேர்தலா

கல்லாட்டுப்புழா திருகுன்னு செருவதூரு பொங்கணம்
திருக்கபாலேஸ்வரம் முன்னுமவிட்டத்தூர் பெரும்மலா

கொல்லத்தும் காட்டகம்பாலா பழையன்னூர் பேரகம்
ஆதம்பள்யேர் அம்பளிக்காடு சேராநெல்லூர் மாணியூர்

தளிம்பாலும் கொடுங்கல்லூர் வஞ்சியூர் வஞ்சுளேஸ்வரம்
பாஞ்சார்குளம் சிட்டுகுளம் ஆலத்தூரத கொட்டியூர்

திருப்பாளூர் பெருந்தட்டா திருத்தாலா திருவல்லயும்
வாழப்பள்ளி புதுப்பள்ளி மங்கலம் திருநக்கரா

கொடும்பூர் அஷ்டமிக்கோவில் பட்டணிக்காட்டு நஷ்டயில்
கிள்ளிகுரிசியும் புத்தூர் கும்பசம்பவமந்திரம்

சோமேஸ்வரஞ்சவெங்காலூர் கொட்டாரக்கர கண்டியூர்
பாலையூர் மஹாதேவநல்லூரத நெடும்பூரா

மண்ணூர் திருச்சளியூர் ஷ்ரிங்கபுரம் கொட்டூரு மம்மியூர்
பறம்புந்தள்ளி திருநாவாய்க்கரீக்காட்டு தென்மலா

கோட்டப்புறம் முதுவரவளப்பாய் சேந்தமங்கலம்
திருக்கண்டியூர் பெறுவனம் திருவால்லூர் சிறைக்கலும்

பலச்ருதி:

இப்பறஞ்சவ நூற்றியெட்டு பக்தியொத்து படிக்குவோர்
தேஹம் நசிக்கிலெத்தீடும் மஹாதேவன்டெ சன்னிதெள

பிரதோஷத்தில் ஜபிச்சாகிலசேஷதுரிதம் கெடும்
யத்ர யத்ர சிவக்ஷேத்ரம் தத்ர தத்ர நமாம்யஹம்

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

Spl Thanks to : Ramesh Anna who gave the text

Super Thanks to Raju and Abhishek Ramanarayanan who transliterated the Malayalam script to Tamil.

ஆதார சக்ரங்களில் அம்பிகையின் தரிசனம்

ஆதார சக்ரங்களில் அம்பிகையின் தரிசனம்
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

ஸ்ரீ மஹாசாஸ்தாவின் ஆறு ஆதாரத் தலங்களைப் பற்றியும், ஸுப்ரமண்யரின் சக்ர தலங்களைப் பற்றியும் நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதேபோல் அம்பிகைக்கு ஆறு ஆதார க்ஷேத்ரங்கள் அமைந்திருப்பது பலரும் அறியாத உண்மை.
இந்த வரிசை பலரும் அறியாதது. பரம ரகசியமானது !

இங்கு நாம் காணும் திருத்தலங்கள் எல்லாமே பிரபலமான சிவக்ஷேத்திரங்களாக விளங்குவதைக் காணலாம்.
சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: என்னும்படி அந்த சிவம் வெளிப்படையாகத் தெரிந்தாலும், அவனை இயக்கும் ஆதார சக்தி அந்த ஆதிசக்தியே என்னும் சூட்சுமமே இதன் சாரம். அதனால் தான் அம்பிகையின் ஆட்சி பீடங்களாக இந்த தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.. இதை யாரோ சாமான்யர் சொல்லவில்லை.

அம்பிகையே இந்த ரகசியத்தை தக்ஷிணாமூர்த்தியிடம் வெளிப்படுத்தினாள். கர்ப்ப குலார்ணவம் என்ற தந்திர நூலில், ஸாக்ஷாத் பரமசிவனே, ஆனந்த பைரவராகத் தோன்றி, அம்பிகையின் இந்த அபூர்வ ரகஸ்யத்தை வெளிப்படுத்தியுள்ளார். அம்பிகை இந்த ஆதார சக்ரங்களில் கோவில்கொண்டு அவளே அகத்தே குண்டலினியாகவும் புறத்தே தேவதையாகவும் விளங்கி நிற்கும் நிலை அற்புதமானது.

அதன்படி இந்த ஒவ்வொரு திருத்தலங்களும் அம்பிகையின் மகத்துவத்தை, அம்பிகையின் வைபவத்தை, அம்பிகையின் தத்துவத்தை உணர்த்தக்கூடிய தலங்களாக இருக்கின்றன.

அம்பிகையின் ஸ்தூல வடிவத்தை இந்த ஆலயத்தில் தரிசிக்கிறோம், அவளது மந்திரமே ஸூக்ஷ்ம வடிவம்.. அவளது ஸூக்ஷ்மதம ரூபம் குண்டலினி வடிவம். குண்டலினி என்பது நம்முள் புதைந்திருக்கும் ஒரு புதையல்...

யத ப்ரஹ்மாண்டே தத பிண்டாண்டே
யத பிண்டாண்டே தத ப்ரஹ்மாண்டே

ப்ரபஞ்சமாகிய ப்ரம்மாண்டத்தில் இருப்பதுவே, மனித சரீரம் எனும் பிண்டாண்டத்திலும் இருக்கிறது. இவ்வுலகைப் படைத்த சிவ-சக்தி மயமான ப்ரப்ரம்மமே அதன் படைப்புக்களெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த சைதன்யமான பராசக்தி நம் உடலில் குண்டலினீ சக்தியாக ஸுஷும்னா எனும் நாடியின் அடியில் ஸர்ப்பம் போல மூன்றரை சுற்று, சுருண்டு கிடக்கிறாள்.

முதுகெலும்பான மேரு தண்டத்தின் வழியே ஸுஷும்னா நாடி செல்கிறது. அதன் அடியிலிருந்து நுனி வரை ஆறு சக்ரங்கள் இருக்கின்றன.

ப்ராண வாயுவை நாம் இடகலை பிங்கலை வழியாக செலுத்தி விரயம் செய்கிறோம். அதனை ஸுஷும்னா வழி செல்லுமாறு செய்தால் ஆறு ஆதார சக்ரங்களும் திறக்கும்.

"ஆறாதார அங்குச நிலையை பேறு நிறுத்திய பேச்சுரையறுத்தே" என்கிறார் ஔவையார். இந்த ஆறு ஆதாரங்களும் ஸூக்ஷ்ம உடலைச் சேர்ந்தவை.

இந்த நிலை யோக மார்க்கமாகவும், பாவனா மார்க்கமாகவும் ஸித்திக்கும். இதுவே உபாஸனையின் முடிவு; இதை நிலையாக அடைந்தவுடன் ஜீவன் முக்தி ஸித்திக்கும். இந்த நிலையை அடைந்தவர் மீண்டும் உலகியல் வாழ்வில் ஸம்பந்தம் இல்லாமல் அம்பிகையின் ப்ரம்மானந்தத்திலேயே திளைத்தவராக வாழ்வர்.

நம் உடலின் ஆதார சக்ரங்களும் அவற்றின் ஸ்தானங்களும்:

மூலாதாரம் முதுகெலும்பின் முடிவில் - ஆசன த்வாரத்தின் அருகில்

ஸ்வாதிஷ்டானம் நாபிக்கும் மூலாதாரத்துக்கும் நடுவில்

மணிபூரகம் நாபியின் பின்னால்

அனாகதம் இதயத்தின் பின்னால்

விசுத்தி தொண்டையின் பின்னால் - கழுத்துப் பகுதி

ஆஞ்ஞா புருவ மத்தியின் பின்னால்

ஸஹஸ்ராரம் தலை உச்சி

த்வாதசாந்தம் - ஆக்ஞா சக்ரத்திலிருந்து 12 அங்குல் உயரத்தில் உள்ளது

ஷோடசாந்தம் – ப்ரம்மரந்த்ரத்திலிருந்து ஆறு அங்குல உயரத்தில் உள்ளது

சூட்சும சரீரத்தில் அனுபவிப்பதே குண்டலினி யோகம் ஆன்ம ஸாதனையில், யோக நிஷ்டையில் நாம் அடையும் ஆனந்தத்தை– புறத்தே ஸ்தூல சரீரத்தில் கண்ணாரக் கண்டு உணரவே அம்பிகை இந்த ஆலயங்களில் குடி கொண்டாள்.

அம்பிகை தன்னிடம் உரைத்த ரகசியத்தை ஈசன் உடைத்து உரைக்கிறார்: :

வல்மீகபுர மத்யஸ்தா ஜம்பூ வன நிவாஸினி |
அருணாசல ச்ருங்கஸ்தா வ்யாக்ராலய நிவாஸினி ||
ஸ்ரீ காளஹஸ்தி நிலையா காசீபுர நிவாஸினி |
ஸ்ரீமத் கைலாச நிலயா த்வாதசாந்த மஹேச்வரி ||
ஸ்ரீ ஷோடசாந்த் மத்யஸ்தா ஸர்வ வேதாந்த லக்ஷிதா |

என்று அவள் ஒவ்வொரு சக்ரத்துக்கும் எங்கே கோவில் கொண்டுள்ளாள் என்று ஆனந்த பைரவர் விவரிக்கிறார்.

மூலாதாரம் – அனைத்துக்கும் ஆதாரமான கமல மொட்டினை தன் தவத்தால் மலரவைக்கும் கமலாம்பாள் : திருவாரூர்

ஸ்வாதிஷ்டானம் – ஸ்வ அதிஷ்டானம் என்று அகிலத்தையே தன் இடமாக ஆட்சி புரியும் அகிலாண்ட நாயகி : திருவானைக்கா

மணிபுரகம் – பேரொளி பொருந்திய ரத்தினமென ஜோதிஸ்தலத்தில் ஸ்வயம் ஜோதியாக ஒளிரும் அபீதகுசாம்பிகை : திருவண்ணாமலை

அநாஹதம் - ஹ்ருதாகாசத்தை தன் வசப்படுத்தி ஆடாதாரை ஆட்டுவிக்கும் சிவகாமசுந்தரி : சிதம்பரம்

விசுத்தி - அக்ஞான குப்பையை சுத்தி செய்து ஞானப் பூங்காற்றாய் வருடும் ஞானப்ரஸூனாம்பிகை :திருக்காளத்தி

ஆக்ஞா - மோக்ஷம் எனும் வீட்டுக்கு அழைத்து, அமுதூட்டி அனுப்பிவைக்கும் அன்னபூரணி : காசி

ஸஹஸ்ராரம் - ஸகல தத்துவங்களையும் கடந்த ஞானவெளியில் தானே நாமாகி வியாபித்து விளங்கும் உமா மஹேச்வரி : திருக்கயிலாயம்

த்வாதசாந்தம் – ஸாக்ஷாத் ஸ்ரீமஹாராக்ஞியாக விளங்கி அருளாட்சி செய்யும் மதுரை மீனாக்ஷி

ஷோடசாந்தம் – மனம் நாசம் அடையும் ஷோடசாந்தம் ஸர்வமுமாகி நிற்கும் ஸ்ரீ காமாக்ஷி மஹாத்ரிபுர ஸுந்தரி

(இதைக் குறித்து ஏற்கனவே ஒரு சிறிய நூல் ஞான ஆலயம் பத்திரிக்கைக்காக என்னால் எழுதப்பட்டது. அதை இன்னும் விரிவாக்கி முழு நூலாக்க ஆசை உள்ளது. அதை அம்பிகை அருள் கூட்டுவிக்க வேண்டும் – அரவிந்த் ஸுப்ரமண்யம்)

இந்த க்ஷேத்திரங்களிலெல்லாம் ஒரு ஸாதகன் தரிசனம் செய்யும் போது, அவனையும் அறியாமல் ஓர் அகப்பயணம் நடைபெறுகிறது. ஸாதகன் சிவனையும், சிவனோடிணைந்த சக்தியையும் உணர்கிறான். இப்பொழுது ஸாதகனுக்கு, இரண்டும் ஒன்றே' என்று புரிய ஆரம்பிக்கிறது. 'ஒன்றை விட்டு இன்னொன்று தனியாக இயங்குவதில்லை' என்பதும் நன்கு விளங்குகிறது. இந்த உயரிய நிலையில், அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத பாவம் அனுபவமாகிறது.

ஸாதகன் தன்னையே சிவமாக, சக்தியாக உணர்ந்த பின் அவனுக்கு ஜனன, மரணம் என்பது இல்லை. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் மட்டுமே !

ஸர்வம் சக்தி மயம் ! அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்

V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

நடராஜ தத்துவம்

நடராஜ தத்துவம்
அரவிந்த் ஸுப்ரமண்யம்

அம்மையும் அப்பனும் பிரிக்கமுடியாத சக்திகள்.
கதிரவனும் ஒளியும் போல்
அரணியும் அக்னியும் போல்
சொல்லும் பொருளும் போல்
சிவமும் சக்தியும் ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பது.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது எவ்வளவு சத்தியமோ, அதேபோல் சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்பதும் சத்தியம்.

படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழிலையும் செய்யும் லலிதையைப் போற்றுகிறது லலிதா ஸஹஸ்ரநாமம். அதே பஞ்ச க்ருத்யங்களையும் செய்யும் பரம்பொருள் வடிவமே நடராசனின்
தாண்டவத்திருக்கோலம்.

இதையே தான் பஞ்ச க்ருத்ய பராயணா என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம். நடராஜ ராஜனின் தாண்டவத்தை மஹேஸ்வர மஹா கல்ப மஹா தாண்டவ ஸாக்ஷிணி என்று சொல்கிறது.

சிவ-சக்தி ஐக்ய வடிவமே சிதம்பரத்தின் சிறப்பு.

சிதம்பர ஸ்தலத்தின், மிக முக்யமான வழிபாடு ஸம்மேளன அர்ச்சனை என்று சிதம்பர ரகசிய கல்பம் சொல்கிறது. ஸ்ரீ நடராஜ மூர்த்தியையும், சிவகாம சுந்தரியையும் சேர்த்தே வழிபடுவதே ஸம்மேளன அர்ச்சனை.

ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ என்று லலிதையின் ஸஹஸ்ரம் துவங்குவது போலவே, ஸ்ரீசிவ ஸ்ரீசிவாநாத ஸ்ரீமாந் ஸ்ரீபதிபூஜித என்று சபாபதியின் ஸஹஸ்ரநாமமும் ஸ்ரீ என்ற மந்த்ர ஒலியிலேயே துவங்குகிறது.

(இது போல சிவமும் சக்தியும், பின்னிப்பிணைந்திருக்கும் ரஹஸ்ய தத்துவங்களே சிதம்பர ரஹஸ்யம். அது இன்னும் நிறைய உண்டு. பொதுவெளியில் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன் - அரவிந்த் ஸுப்ரமண்யம்)

மகா பெரியவருக்கு அதனாலேயே நடராஜப் பெருமானிடம் பக்தி கூடுதல். அதிலும் குஞ்சிதபாதம் என்று சொல்லக்கூடியது தூக்கிய திருவடியின் மேல் சாற்றிய
பிரசாதங்களை அதீத பக்தியோடு ஸ்வீகரிப்பார்.

அந்த தூக்கிய திருவடியான குஞ்சித பாதத்திற்கு குஞ்சிதாங்க்ரிஸ்தவம் என்றே ஸ்ரீஉமாபதி சிவம் தனியாக ஸ்தோத்திரமே செய்திருக்கிறார்.

ஆனந்த நடனம் செய்யும் நடராஜ ராஜப் பெருமானின் ஸ்வரூபமே தனிப்பெரும் தத்துவ வடிவம்.

கையில் உள்ள உடுக்கை ச்ருஷ்டி தத்துவம்; அபயம் காட்ட கூடிய கை ஸ்திதி தத்துவம்; அக்னி சம்ஹார தத்துவம்; காலில் போட்டு மிதிக்கும் முயலகன் மறைந்திருக்கும் திரோதானம்; கீழே சுட்டிக்காட்டும் இடதுகையே அனுக்கிரகம்.

அந்த அனுக்ரஹம் செய்யும் இடது கை, குஞ்சித பாதம் என்னும் இடதுகாலைச் சுட்டிக் காட்டுகிறது.

ஸ்ரீகண்டார்த்த சரீரிணி என்றல்லவா
அம்பிகை விளங்குகிறாள் ? சிவபெருமானின் நேர் பாதி அவளேயல்லவா?

எனவே நடராஜப்பெருமானின் தூக்கிய இடது திருவடி அம்பிகைக்கு உரியது. அந்த திருவடியே மோட்சத்துக்கு கதி என்பதை நடராஜ தத்துவம் உணர்த்துகிறது.

இதையேதான் ஸ்ரீவித்யா தத்துவத்தில் குரு பாதுகை என்றும், அதுவே அர்த்தநாரீஸ்வர பாதுகை என்றும் உணர்த்தப்படுகிறது.

அதனால்தான் காமக் கோட்டத்தில் உரையும் சிவகாமசுந்தரியை
ஸாக்ஷாத் த்ரிபுரசுந்தரி
என்றே ஞானிகள் போற்றுகிறார்கள்

சிவ சக்தி தத்துவ ஸம்மேளனமே சிதம்பர தத்துவம்!

சிவசக்த்யைக்ய ரூபிணி லலிதாம்பிகா
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

நூத்தியெட்டு துர்கா ஆலயங்கள்

நூத்தியெட்டு துர்கா ஆலயங்கள் 

கேரளத்தின் நூற்றியெட்டு துர்காலயங்கள்
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

வழக்கமாக
சம்ஸ்கிருத ஸ்துதிகளையும்
தமிழ் பாடல்களையும் பார்க்கும் நாம் இன்று வித்தியாசமாக ஒரு மலையாள துதியை பற்றி அறிய முயல்வோம்.

ஸாக்ஷாத் மஹா விஷ்ணுவின் அவதாரமாகவும்
பரமேஸ்வரனின் நேரடியான சீடனாகவும் விளங்கிய பரசுராமர்
க்ஷத்திரிய நிக்ரஹ பாப நிவர்த்திக்காக
தான் வென்றெடுத்த பூமி அத்தனையும் அந்தணர்களுக்கு தானம் கொடுத்துவிட்டு
தனக்காக சொந்தமாக ஒரு பூமியை உருவாக்க எண்ணினார்.

கோகர்ண க்ஷேத்திரத்தில்
கடலரசனை நோக்கி கடும் தவமிருந்து தனக்கென நிலம் ஒதுக்குமாறு வேண்டினார்.
"நாராயணனின் அவதாரமான பரசுராமருக்கு நான் எப்படி நிலம் கொடுப்பது அதனால் நீங்கள் உங்கள் கோடாலியை விட்டு எறியுங்கள் அதனால் கடல் எவ்வளவு தூரம் பின்வாங்குகிறதோ, அவ்வளவு தூரம் நான் உங்களுக்கு தருகிறேன்" என்று வருணன் சத்தியம் செய்தார்.

அதன்படி கோகர்ணத்திலிருந்து பரசுராமர் வீசி எறிந்த
கோடாலி கன்னியாகுமரி வரை கடலை பின்வாங்கியது.

பரசுராமர் இந்த பகுதியில் 64 கிராமங்களாக அதைப் பிரித்து அந்தணர்களை குடியேற்றினார்.
அதில் 32 கிராமங்கள்
துளு தேசம் என்று சொல்லப்படும் கோகர்ணம் முதல் பெரும்புழை வரையிலான கிராமங்களாகவும்,
மீதி 32 மலையாளம் பேசக்கூடிய தேசம் என்று சொல்லப்படக்கூடிய பெரும்புழை முதல் கன்னியாகுமரி வரையிலான கிராமங்களாக விளங்கியது. (இன்று சில பகுதி கர்நாடகத்திலும் தமிழகத்திலும் இருக்கிறது)

பிரம்மாண்ட புராணத்தைச் சேர்ந்த கேரள கல்பத்திலும், கேரளோத்பத்தியிலும் இந்த தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

தனக்கென ஓர் பூமியை உருவாக்கிய பின் பரசுராமர் அந்த பூமியின் க்ஷேமத்துக்காக 108 துர்க்கை ஆலயங்களைப் பிரதிஷ்டை செய்தார்.

வடகோடியில்
கோகர்ண ஷேத்திரம் முதல் தென்கோடியில் கன்னியாகுமரியில் துவங்கிய பரசுராமரின் பிரதிஷ்டை வடகோடியில் கோகர்ணம் வரை நீண்டது.

108 துர்க்காலய ஸ்துதி என்ற தோத்திரத்தை கேரள மக்கள் அனுதினமும் சாயங்கால வேளையில் விளக்கேற்றி விட்டு சொல்கிறார்கள். இந்தத் தோத்திரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்துள்ள 108 துர்காலயங்கள் என்று வரிசைப்படுத்தி போற்றுகிறார்கள்.
மலையாளமும் ஸம்ஸ்க்ருதமும் கலந்து இருக்கக்கூடிய மணிப்பிரவாளமாக இந்த ஸ்தோத்திரம் அமைந்திருக்கிறது.

இந்த ஸ்தோத்திரத்தை சொல்வதாலும்
108 க்ஷேத்திரத்தில் மானசீகமாக தரிசித்த பலன் கிடைக்கிறது.

"துர்காலயங்கள் நூற்றெட்டும் துஷ்க்ருதம் தூர நீங்ஙுவான்
துக்கம் போக்கேணம் வணங்ஙுன்னே
துர்கா தேவி நமோஸ்துதே"

"வலயாலயம் ஆதிக்கும் தைக்காடும் கடலாடியும்
கன்யாகுமாரி காமாக்ஷி மூகாம்பி செறுகுன்னிலும்"

எனத் துவங்கும் அந்த ஸ்தோத்திரம், வலயாலயம் என்று கூறப்படும் ஊரகத்து அம்மா என்ற காமாக்ஷி தேவியின் ஆலயத்தை (திரிச்சூர்) முதல் கோவிலாகக் கொண்டு இந்தத் துதி துவங்குகிறது.

ஐலூர் உளியந்நூர் புதுக்கோடும் கடலுண்டியும் என பாலக்காட்டிலுள்ள எங்கள் குலதேவதையான புதுக்கோடு பகவதியையும் சொல்கிறத.

(சோட்டானிக்கரை, செறுகுந்நு, புதுக்கோடு போன்ற பல பிரபலமான தலங்களில் காமாக்ஷி, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, அன்னபூரணி என்றெல்லாம் சொல்லப்படும் தேவதைகள்
மூலத்தில் துர்கா ஸ்வரூபமே என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். இந்த துர்க்காலய வரிசை அதை உறுதி செய்கிறது - அரவிந்த் ஸுப்ரமண்யம்)

108 கோவிலையும் சொன்ன பிறகு இந்த விசேஷமான திருத்தலங்களில் எந்தெந்த நாட்களில் தரிசித்தால் / இந்தத் துதியைச் சொன்னால் என்னென்ன விதமான பலன் கிடைக்கும் என்பதையும் இந்த பாடல் சொல்கிறது.

"அஷ்டமி கார்த்திகை செவ்வா
நவமி வெள்ளியாழ்ச்சயும் பதினாலும் திங்கள் முதலாகும் சந்த்யாகாலே விசேஷதா"

அஷ்டமியும் நவமியும் சதுர்தசியிலும், கார்த்திகை நட்சத்திரத்திலும்
செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தரிசித்தல் விசேஷம்.

"ஆதூரன்மார் ஜபிச்சீடேல் ஆரோக்யம் உளவாய் வரும்
கர்ப்பம் உள்ளவோர் ஜபிச்சீடேல் சத்புத்ரன் உளவாய் வரும்"

நோயுள்ளவர் இதை ஜெபித்தால் நோய் ஆரோக்கியம் வரும் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் இதை ஜபித்தால் நல் புத்திரப்பேறு கிடைக்கும்.

"மங்கல்ய ஸ்த்ரீ என்னாகில் நல்குந்நு நெடுமங்களம் ஆயுஸ்ஸு சிசுக்கள்கு முக்தி நல்குன்னு வ்ருத்தனும்"

சுவாசினிகளான பெண்களுக்கு
தீர்க்கசுமங்கலி பாக்யத்தையும்,
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும்,
வாழ்ந்து முடித்தவர்களுக்கு மோட்சத்தையும் கொடுக்கும்.

பூத பிரேத பிசாசுகளின் தொல்லை இதை ஜபித்தால் நீங்கிவிடும்.
வறுமையும் பயமும் துக்கமும் ஆபத்து நீங்கி என்றென்றும்
துர்காதேவி காப்பார்.

"பூத ப்ரேத பிசாசுக்கள் ஜபிச்சால் அகலும் துலோம்
தாரித்ர்ய பய துக்கங்கள் ஆபத்துக்கள் அனர்த்தவும் நீக்கி ரக்ஷிக்கும் என் அம்மா

துர்க்கா தேவி நமோஸ்துதே"

அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் !

பக்தபரிபால பாத ரேணு
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

108 துர்காலய ஸ்துதி 

துர்கா ஆலயங்கள் நூத்தியெட்டும்
துஷ்க்ருதம் தூரே நீங்குவான் 
பேருச்சொல்லி ஸ்துதிக்குன்னே 
ஸ்ரீ துர்காதேவி நமோஸ்துதே 

வலையாலயமாதிக்கும் தைக்காடும் கடலாயிலும் 
கன்னியாகுமாரி காமாக்ஷி மூகாம்பி செருகுன்னிலும் 

குமாரநெல்லூர் காவீடு சேறாநெல்லூறு செங்களம்
தொட்டிப்பள்ளி இடப்பள்ளி பேர்க்காவு மயில்புரம் 

வெள்ளித் தட்டழகத்தென்னும் சாத்தன்னூர் நெல்லுவாயிலும்
அந்திக்காடாவணம் கோடு ஐயந்தோள் அய்யகுன்னிலும் 

கடப்பூருழலூர் என்னும் சொல்லாம் புன்னரியம்மையும் 
காரமுக்கு மிடக்குன்னி செம்புக்காவீட நாடுமே 

பூவத்திசேரி சேர்ப்பேன்னும் குட்டநல்லூர் சேர்த்தல
வெள்ளிக்குன்னென்னு சொல்லுன்னு வேண்டூர் மாணிக்யமங்கலம்

விளப்பா வெளியென்னூறும் வெளியம் கொடுவிடக்கொடி
ஈங்கயூருமிடப்பெட்ட கட்டலும் கருமாப்புறம் 

சொல்லாம் கைவாலயம்புத்தூர் ஆரூர் செங்கணக்குன்னிவ
போத்தனூர் உளியன்னூர் பந்தலூர் பன்னியங்கரா 

மருதூர் மறவஞ்சேரி ஞாங்காரிடப கண்ணனூர் 

காட்டூர் பிஷாரி சிட்டண்டா சோட்டானிக்கற ரெண்டிலும்
ஆயிறூறிடயன்னூறும் புதுக்கோடு கடலுண்டியும் 

திரக்குளம் கிடங்கேத்து விரங்காட்டூர் ஷிரஸ்ஸிலும் 
பேச்செங்கணூர் மாங்கட்டூர் தத்தபிள்ளி வரக்கலும்

கரிங்காச்சிரா  செங்கன்னூர் தொழான்னூர் கொரட்டியும்
தேவலக்கோடு இளம்பாரா குறிஞ்சிக்காட்டு காறையில் 

த்ரிக்கணிக்காடு மயிலே உண்ணூர் மங்கலம் என்னிவ
தெச்சிக்கோட்டோலா முக்கோலா பக்தியால் பக்திஷாலையும் 

கிழக்கனிக்காடழியூர் வள்ளூர் வணோடிகுன்னிவா
பத்தியூர் திருவாலத்தூர் சுரக்கோடென்ன கிழடூர் 

இரிங்கோளம் கடம்பேரி த்ரிச்சம்பரமிதாதரால்
மேழக்குன்னத்து மாவட்டூர் த்ரிப்பளேரிகளம்பிலும் 

ருணநாராயணம் நல்லூர் கிரமத்தால் சாலரண்டிலும்

அஷ்டமீ கார்த்திக செவ்வா நவமி வெள்ளியாழ்ச்சயும் 

பதினாலும் திங்கள் முதல் ஸந்த்யாகாலே விசேஷிதம்

ஆதுரன்மார் ஜபிச்சீடில்
ஆரோக்யம் உளவாய் வரும்
கர்ப்பமுள்ளோர் ஜபிச்சீடில்
 சல்புத்ரன் உளவாய்வரும் 

ஆயுஸ்சின்னும் சிசுக்கள்க்கும் பக்திவர்தன நல்குமே 
பூதப்ரேத பிசாசுக்கள் ஜபிச்சால் அகலும் துலோம் 

தாரித்ரிய பய துக்கங்கள் 
ஆபத்துகளநர்த்தவும்
நீக்கி ரக்ஷிக்க என்னம்மே 
ஸ்ரீ துர்காதேவி நமோஸ்துதே